ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியை ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும், இந்த தடுப்பூசி ஆயிரம் ரூபாயில் விலையில் கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது: இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது கட்ட சோதனை செல்வோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அந்த சோதனை முடிவடைய இரண்டிலிருந்து, இரண்டரை மாதங்கள் ஆகும் என நாங்கள் கணித்துள்ளோம். அதன்படி, சோதனைகள் அனைத்தும் சாதகமாக இருந்து, இந்திய மருத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அதனை பாதுகாப்பானது என்று கூறும்பட்சத்தில் வரும் நவம்பரில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.