45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் காங்கிரஸ் அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் என்ற ஒரு கோட்பாடே இல்லை எனவும் கட்சி மற்றும் தேசிய நலனை விட நேரு-காந்தி குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் விமர்சித்துள்ளார்.
இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் நிலவுவதாக கூறியுள்ளார். நேரு குடும்ப வாரிசுகளை தவிர மற்ற தலைவர்கள் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும், மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, சில தலைவர்கள் சில பிரச்சனைகளை எழுப்பிய போது, அவர்களை சிலர் கூச்சலிட்டு அடக்கியதாக அமித்ஷா சுட்டிக் காட்டி உள்ளார். செய்தித் தொடர்பாளர்கள் சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டனர் என்றும், காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் மூச்சு திணறி வருகின்றனர் என்பது சோகமான உண்மை எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.